மன்சூர் அலிகான் தலைமறைவு?... வெளியான ஆடியோவால் பரபரப்பு!

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை தவறுதலாக சேர்த்ததால் முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்ப பெற்றுள்ளார். 

நவம்பர் 23, 2023 - 18:48
நவம்பர் 23, 2023 - 18:49
மன்சூர் அலிகான் தலைமறைவு?... வெளியான ஆடியோவால் பரபரப்பு!

மன்சூர் அலிகான் அண்மையில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, மன்சூர் அலிகானை கைது செய்து விசாரிக்கலாமா அல்லது விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பலாமா என காவல்துறையினர் ஆலோசித்து வந்தநிலையில், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு பொலிஸார் நோட்டீஸ்-ஐ அனுப்பினர்.

மேலும், தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தலின்படி, அவர் மீது 2 பிரிவுகள் கீழ் சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக ஆயிரம் விளக்கு காவல் நிலைய பொலிஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், உடல்நிலை பாதிப்பு காரணமாக நாளை ஆஜராக அவகாசம் கேட்டுள்ளார்.

தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் இருமல் போன்ற பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருவதால் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, ஆஜராக காவல்துறை ஒருநாள் அவகாசம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 15 நாட்களாக இருமலாக இருந்து நேற்று மிகவும் பாதிப்படைந்து, பேச மிகச்சிரமமாக இருப்பதால் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு, நாளை தாங்களை சந்திக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு மிகத் தாழ்மையன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை தவறுதலாக சேர்த்ததால் முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்ப பெற்றுள்ளார். 

த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மன்சூர் அலிகான் எப்போது வேண்டுமென்றாலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டதால், அவர் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் தலைமறைவானதாக கூறப்படும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  மன்சூர் அலிகான் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நான் எனது கடிதத்தில் பொலிஸ் ஸ்டேஷனில் நாளை ஆஜராகிவிடுகிறேன் என கூறியிருக்கிறேன்.

தான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, போனை சுவிட்ச் ஆஃப் செய்தால் தலைமறைவாகி விட்டேன் என்று சந்தோச செய்தியை பரப்புகிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை கால் பேசுவது. பூட்டிய ஆஃபீஸை போட்டோ எடுத்து போட்டு தலைமறைவு என்கிறார்கள்.

நாட்டுல எவ்ளோ பிரச்சினைகள் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும்  இப்படித்தான் மத்திய அரசு ஆட்களை ஏவி பிரச்சினைகளை திசை திருப்புகிறார்கள். நான் என்ன நிஜமாகவே யாரையாவது கற்பழித்தேனா, கொலை செய்தேனா? நான் ஏன் தலைமறைவு ஆகவேண்டும்? என்று பேசியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!