QR எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: இன்று முதல் புதிய லீற்றர் அளவுகள் அமல்
இலங்கையில் QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில் நேற்று (21) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் இந்த தீர்மானம், உள்நாட்டுத் தேவைகளை சமாளிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
புதிய திருத்தத்தின் படி, பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிற்றூந்துகளுக்கான ஒதுக்கீடு 15 லீற்றரிலிருந்து 25 லீற்றராக உயர்ந்துள்ளது.
அதேபோல், வேன்களுக்கு 40 லீற்றரிலிருந்து 50 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 60 லீற்றரிலிருந்து 100 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பொதுப் போக்குவரத்து மற்றும் தனிப்பட்ட பயண தேவைகளுக்கு சற்றே இலகுவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 15 லீற்றர் வழங்கப்பட்ட நிலையில், இனி 20 லீற்றர் வழங்கப்படும். உந்துருளிகள் மற்றும் குவாட்ரிசைக்கிள்களுக்கு தலா 8 லீற்றர் என புதிய அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான வாகனங்களுக்கான ஒதுக்கீடு 25 லீற்றரிலிருந்து 40 லீற்றராக உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாரவூர்திகள் மற்றும் விசேட தேவைக்கான வாகனங்களுக்கான ஒதுக்கீட்டில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாரவூர்திகளுக்கு தொடர்ந்து 200 லீற்றரும், விசேட வாகனங்களுக்கு 40 லீற்றரும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள், எரிபொருள் விநியோகத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன.
