இலங்கையில் இந்த ஆண்டுக்குள் மற்றுமொரு தேர்தல் : அமைச்சர் சூசகம்
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நிச்சயமாக நடைபெறும் என்று கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
இன்று (15) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தல் தாமதமாகும் என்ற தகவல்களுக்கு இடமில்லை என்றும், அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை தற்போது துல்லியமாக கூற முடியாது என்றாலும், இந்த ஆண்டுக்குள் அவை நடத்தப்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
“மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும். அவை தாமதமாகும் என்று கூறப்படுவது சரியல்ல. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைகள் அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
