சமீரா தொடர்பில் தலையீடுவோம்: அமைச்சர் விஜித ஹேரத்
பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது, சர்வதேச கடல் பகுதியில் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, தற்போது இஸ்ரேலியப் படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண் சமீரா மஹபூப்தீனை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஃபசீர் முகமது எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இது தொடர்பாக ஏற்கனவே தலையீடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட செய்தி குறித்து நேற்று மாலை அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கிடைத்தவுடன், உடனடியாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். குளோபல் சுமுத் கப்பல் படையின் மருத்துவ முதலுதவி அதிகாரியாகத் தானாக முன்வந்து இப்பயணத்தில் இணைந்துகொண்டவர் சமீரா மஹபூப்தீன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் கரியப்பர், சமீராவின் கைது தொடர்பாகக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, இரண்டு வாரங்களுக்கு முன்னரே துருக்கியில் உள்ள இலங்கைத் தூதுவருடன் கலந்துரையாடி, அந்தச் செயற்பாட்டாளரைத் தொடர்புகொள்ள முடிந்ததாகவும், பாலஸ்தீன ஒற்றுமைக் குழுவும் இந்த விவகாரத்தை அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அரசாங்கத்தின் தலையீட்டிற்கு நன்றி தெரிவித்து நிசாம் கரியப்பர் பேசினார்.
வெளியுறவு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார். சமீரா மஹபூப்தீனின் நிலைமையை வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தற்போதைய தகவல்களின்படி அவரும் மற்றும் பலரும் இஸ்ரேலியக் காவலில் இருப்பதாகவும் அவர் கூறினார். அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவரது தடுப்புக்காவல் தொடர்பான சட்ட நிலைமை குறித்து விவாதிப்பதற்கும், இராஜதந்திர வழிகளூடாக அவரை அணுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கப்பல்களில் நிகழ்ந்த தலையீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் குறித்து அரசாங்கம் முன்கூட்டிய முடிவுகளை எடுக்கவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் இலங்கைக் குடிமக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் சட்ட உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்றும் பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.

