உத்தியோபூர்வ சின்னங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் கோருகிறது

அரச சொத்துக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மேற்படி சின்னம் நபரொருவரிடத்தில் அல்லது நிறுவனமொன்றிடத்தில் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

ஜுலை 10, 2023 - 16:32
உத்தியோபூர்வ சின்னங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் கோருகிறது

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

2022-07-09 -  2022-07-14 வரையிலான தினங்களில் ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திக்கொண்டு அதற்குள் தங்கியிருந்த காலப்பகுதியில் கலைத்துவ மற்றும் தொல்லியல் பெறுமதிமிக்க பல்வேறு பொருட்கள் காணாமல் போயுள்ளன. இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமாக காணப்பட்ட (Coats of Arms) சின்னங்கள் பலவும் அவற்றுள் அடங்கும்.

அரச சொத்துக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மேற்படி சின்னம் நபரொருவரிடத்தில் அல்லது நிறுவனமொன்றிடத்தில் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மேலும் இது பற்றிய தகவல்களை அறிந்திருப்பின் 0112354354  என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுகொண்ட ஜனாதிபதியின் செயலாளர், தேசிய பெறுமதிமிக்க உத்தியோகபூர்வ சின்னத்தை தேடியறிவதற்கு மக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!