சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது

பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 18, 2023 - 15:13
சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது

(க.கிஷாந்தன்)

பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று (17) காலை இந்த 9 கைதிகளும் தப்பி ஓடிவிட்டனர். 

சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தல்தென சிறைச்சாலையின் புதிய பண்ணைக்கு அருகில் இன்று (18) காலை இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தகெட்டிய பொலிஸார் கிராம மக்களின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதலின் போது கந்தகெட்டிய பதுலுஓயாவிற்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு அருகில் மேலும் நான்கு இளைஞர்கள் (17) நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (18) அதிகாலை 4.00 மணியளவில் கந்தகெட்டிய கிரிவெஹெர பதுலுஓயாவிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது எஞ்சிய மூன்று இளைஞர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 23, 24, 25, 26 வயதுடைய இந்த இளைஞர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றவர்கள் என்றும் சீர்திருத்தத்தின் பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி இளைஞர்கள் இன்று (18) பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சீர்திருத்த நிலையத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 376 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் 48 உத்தியோகத்தர்கள் மட்டுமே இங்கு கடமையாற்றுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!