முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஏப்ரல் 10-ஆம் திகதிக்கு முன்னர் சத்தியக்கடதாசி மூலம் தங்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிவிப்பை வழங்குமாறு இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் தொடர்பாக 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு விசேட விசாரணை தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணை தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டதால், ஏப்ரல் 10-ஆம் திகதிக்குப் பிறகு தகவல்களை வழங்க மேலும் அவகாசம் அளிக்கப்படாது என்று இலஞ்ச ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
