பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.108 மில்லியன் கொக்கைனுடன் இந்தியர் கைது
பண்டாரநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் இன்று (15) காலை சுமார் ரூ.108 மில்லியன் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளுடன் இந்தியப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, ‘பசுமை வழி’ ஊடாக போதைப்பொருளை கடத்த முயன்றதாக கூறப்படும் இந்த நபர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 60 வயதுடைய இந்தியப் பிரஜை என்றும், தொழில்முறையில் புவியியலாளராக பணியாற்றுபவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்க அதிகாரிகளின் தகவலின்படி, அவர் Qatar Airways விமானம் மூலம் இன்று காலை 10.40 மணியளவில் தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளார். அதற்கு முன்பு உகண்டாவின் கம்பாலாவிலிருந்து போதைப்பொருளை எடுத்துச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் பயணப்பையில் இருந்த இரண்டு கோப்பு உறைகளுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 150 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும், மீட்கப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
