காற்றாலை மின்சாரம், கனிய மணல் அகழ்வினை தடுக்க கோரி - மன்னாரில் இருந்து நூற்றுக்கணக்கான தபாலட்டைகள் அனுப்பி வைப்பு
மன்னார் தீவுக்குள் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சாரம் மற்றும் கனிய மண் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தீவுக்குள் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சாரம் மற்றும் கனிய மண் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக இந்த நடவடிக்கை இன்று(27) மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள், மத தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தபாலட்டைகளை அனுப்பி வைத்தனர்.
மன்னார் தீவுக்குள் பாரிய ஆபத்தையும் எதிர்கால சந்ததியினரின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இந்த தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜேசன் பிகிராடோ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜாட்சன் பிகிராடோ தெரிவிக்கையில், மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் இந்த தபால் அட்டை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்டவர்களிடம் இது தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு குறித்த திட்டத்தின் பாதகத்தையும், இத்திட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை வலியுறுத்தும் வகையிலும் தபால் அட்டைகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறன.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் ஜனாதிபதியாக வந்தால் மன்னார் தீவில் அமைக்கப்படும் காற்றாலை மின்சார திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தனது தேர்தல் பிரசாரங்களின் போது கூறியிருந்தார்.
தற்போது அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதை வலியுறுத்தும் வகையில் தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறன” என்றார்.