காலநிலையில் ஏற்பட்டுள்ள தீவிர நிலைமை - வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்களின் பிரகாரம் செயற்படுவது அனைவரதும் கடமை.

மே 25, 2024 - 14:13
காலநிலையில் ஏற்பட்டுள்ள தீவிர நிலைமை - வெளியான அறிவிப்பு

நாட்டில் அனர்த்த நிலை அல்லது மரம் முறிந்து விழும் அபாயம் காணப்பட்டால் அது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், அமைச்சில் நேற்று (24.05.2024) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்களின் பிரகாரம் செயற்படுவது அனைவரதும் கடமை.

இதன் ஊடாப சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெற முடியும். எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்களுக்கு கவனம் செலுத்துமாறு நாங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறோம். 

மேலும், மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. மரங்கள் விழுவது தொடர்பாக எச்சரிக்கை விடுப்பதற்கென ஒரு நிறுவனம் எமது நாட்டில் செயற்படுவதில்லை. 

இவ்வாறான எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பை கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம்.  இதுதொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. 

அதேநேரம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது, உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் கட்டுமானங்களை அமைப்பதற்கு அனுமதிப்பதாகும்.

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களாக இரத்தினபுரி, மாத்தறை, காலி, கொழும்பு, கழுத்துறை, கம்பஹா, அக்குரணை போன்ற பிரதேசங்கள் இனம் காணப்பட்டிருக்கின்றன.

எனவே, நாட்டில் எப்பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை அல்லது மரம் முறிந்துவிழும் ஆபத்து இருக்குமானால் அதுதொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். அத்துடன், கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்க முடியும்” என அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!