அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!
அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியில் வீசப்படும் குப்பைகளால் வீதியின் இரு மருங்கிலும் குப்பை கூழங்களால் நிரம்பி வழிகின்றன.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியால் உடற்பயிற்சிக்காக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறித்த குப்பைகள் காற்றால் அருகிலுள்ள கடற்கரைக்கும் பரவுகின்றன.
குறித்த காணியில் கொட்டப்படும் குப்பைகளில் பியர் ரின்கள் மற்றும் பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்க முடியாத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றன.
மேலும், காணியில் தேங்கி நிற்கின்ற குப்பைகளில் நீர் நிலை தேங்குவதால் டெங்கு பரவுவதற்கும் காரணமாக அமைகின்றது. நாய்கள், மாடுகள் மற்றும் காகங்கள் குப்பைகளை உண்பதுடன், இதனால் அயலில் உள்ள கிணறுகள் மற்றும் கால்வாய்கள் அசுத்தமடைகின்றன.
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் கோவில் காணி காணப்படுவதுடன், தொடர்ச்சியாக தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
கோவில் காணியில் குப்பைகளை வீசாதீர்கள் என அறிவிப்பு பலகையை வைத்தும் அதையும் பொருட்படுத்தாமல் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கல்முனை மாநகர சபையினர் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என பொமுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாறுக் ஷிஹான்


