பணமோசடி குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது!
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மெஹொட்டி ஆராச்சிகே லஹிரு பிரமோத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், நேற்று (30) மதியம் 12:45 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய காலத்தில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், முறைப்பாடுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்குகள் வாயிலாகச் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டு, அந்தப் பணத்தை மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.