கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞன் உயிரிழப்பு, இருவர் காயம்

இந்தத் துப்பாக்கிச் சூட்டின் காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவராத நிலையில், இது இரண்டு பாதாள குழுக்களுக்கிடையிலான முன்விரோதத்தின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி 2, 2026 - 09:46
ஜனவரி 2, 2026 - 09:54
கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞன் உயிரிழப்பு, இருவர் காயம்

நவகமுவ - கொரதொட்ட, மெணிக்காகார வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு (1) சுமார் 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று ஆண்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர், பொரளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த இருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் தெமட்டகொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாடகைக்கு எடுத்திருந்த வீடொன்றில் தங்கியிருந்தவர்களை இலக்காகக் கொண்டு, ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவரின் உடலில் 04 துப்பாக்கி ரவைகளும், மற்றொருவரின் உடலில் ஒரு ரவையும் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டின் காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவராத நிலையில், இது இரண்டு பாதாள குழுக்களுக்கிடையிலான முன்விரோதத்தின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!