நாரஹேன்பிட்டி பொலிஸ் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச்சூடு – கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் மீட்பு

பின்னர், தனது மகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சந்தேகமடைந்த அவர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
நாரஹேன்பிட்டி பொலிஸ் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச்சூடு – கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் மீட்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு - பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (29) இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின்போது, பொலிஸாரின் பலமுறை நிறுத்துமாறு விடுத்த உத்தரவையும் மீறி வாகனம் தொடர்ந்து பயணித்ததால், அதனை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பெண்ணின் காதலனே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற்பகல் சுமார் 1.30 மணியளவில், BMICH வளாகத்திலிருந்து இளம் பெண் ஒருவர் காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த குறித்த காரை பொலிஸார் இடைமறிக்க முயன்றுள்ளனர்.

பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போதிலும், சாரதி அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாரஹேன்பிட்டி–நாவல வீதியிலும் மீண்டும் பொலிஸாரால் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும், சாரதி அதற்கு இணங்காமல் தொடர்ந்து வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து, வாகனத்தை நிறுத்தும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து சாரதி வாகனத்தை கைவிட்டு, அங்கிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டபோது, அதற்குள் இளம் பெண் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற சாரதி குறித்த பெண்ணின் காதலன் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் வெலிகம மற்றும் மிதிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்தார்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக குறித்த இளம் பெண் தனது குடும்பத்தினருடன் BMICHக்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், தான் பட்டமளிப்பு விழாவுக்கு செல்வதை தனது காதலனிடம் அவர் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர், சந்தேகநபரின் வாகனத்தை குறித்த பெண்ணின் தந்தையே BMICH வளாகத்துக்கு ஓட்டிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், தனது மகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சந்தேகமடைந்த அவர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

வாகனம் பொலிஸ் பொறுப்பில்

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, தற்போது கருவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இளம் பெண், கொழும்பு நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் (JMO) மருத்துவப் பரிசோதனைக்காக இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர