வெற்றிலை துப்பியவர்கள், சிறுநீர் கழித்தவர்களுக்கு அதிரடி தண்டனை – செய்த அசுத்தத்தை அவர்களே சுத்தம் செய்தனர்!
புனரமைக்கப்பட்ட கொழும்பு - புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்துக்குள் வெற்றிலை துப்பிய மற்றும் சிறுநீர் கழித்த 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் பிடிக்கப்பட்டு, அவர்கள் அசுத்தம் செய்த இடங்களை அவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் பல பஸ் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அடங்குவர்.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக இந்த முனையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கண்காணிப்பு அமைப்பின் மூலமாகவே இந்த விதி மீறலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இக்கண்காணிப்புப் பணியை, படைப்பிரிவுத் தலைவர் (Squadron Leader) இந்திக விக்ரமசிங்க தலைமையிலான 25 விமானப்படை வீரர்கள் அடங்கிய குழுவினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பில் 64 கமெராக்கள் பயன்படுத்தப்பட்டு, தினசரி 88 கண்காணிப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பு, கடந்த ஏழு மாதங்களில் மாத்திரம் பஸ் நிலையத்தில் 1,286 சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 64 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.