பத்மேயின் அலைபேசிகளில் அதிர்ச்சித் தகவல்: 13 சிறை அதிகாரிகள், 9 அரசியல்வாதிகள், 7 நடிகைகளுடன் தொடர்பு!

பத்மேயின் அலைபேசிகளில் அதிர்ச்சித் தகவல்: 13 சிறை அதிகாரிகள், 9 அரசியல்வாதிகள், 7 நடிகைகளுடன் தொடர்பு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தோனேசியாவில் சர்வதேச நடவடிக்கையொன்றின் மூலம் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான 'கெஹெல்பத்தர பத்மே' எனப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா மற்றும் 'கூடு நிலங்க' எனப்படும் நிலங்கத் சம்பத் சில்வா ஆகிய சந்தேகநபர்கள் முதன்முறையாக நீதிமன்றத்தில் நேற்று (25) ஆஜர்படுத்தப்பட்டனர். 

இவர்களை எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியது.

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 கையடக்கத் தொலைபேசிகளில் இருந்த அழிக்கப்பட்ட தரவுகளை புலனாய்வாளர்கள் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளனர். இதன்படி, 8,841 தொலைபேசி அழைப்புகள், 326,000 இற்கும் அதிகமான புகைப்படங்கள், 1,101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5,039 வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தபோது, 9 அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 7 நடிகைகள் மற்றும் மாடல்கள் பற்றிய விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும், இந்த விவரங்கள் கண்டறியப்பட்டமை மட்டுமே இந்த நபர்கள் குற்றமிழைத்துள்ளார்கள் என்பதைக் குறிக்காது என புலனாய்வாளர்கள் நீதிமன்றில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், 13 சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்தேகநபர் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளமை வெளிப்பட்டுள்ளதுடன், இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், குறித்த தரவுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 20 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்கள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களின் 19 கடவுச்சீட்டுக்களின் புகைப்படங்கள் சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவரது 17 வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன. 

சந்தேகநபரிடம் 21 துப்பாக்கிகள் இருந்த நிலையில், அவற்றில் 19 துப்பாக்கிகள் ஏற்கெனவே வெவ்வேறு விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கெஹெல்பத்தர பத்மே, 2021 மே 21 அன்று சட்டப்பூர்வமாக இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், டுபாய், ஜப்பான், இந்தோனேசியா, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு சுமார் 15 முறை பயணம் செய்துள்ளார். மேலும், இவர் பிரசித்தி பெற்ற கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் 18ஆவது சந்தேகநபர் அல்லது பிரதான சந்தேகநபர் என கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, வெலிசர சிறைச்சாலையில் சந்தேகநபரின் எதிராளிகள் இருப்பதால் அவரை வெலிசர தவிர வேறு சிறையில் வைக்குமாறு கோரினார். எனினும், சந்தேகநபருக்குத் தொடர்பாடல் சாதனங்கள் கிடைத்தால் விசாரணைக்குத் தடை ஏற்படும் என்பதால் அவரை வெலிசர சிறையிலேயே வைக்குமாறு புலனாய்வாளர்கள் கோரினர்.

சந்தேகநபரான பத்மே நீதிமன்றில் பேசுகையில், "கனம் நீதவான் அவர்களே, எனக்கு கல்லீரலில் பாதிப்பு உள்ளது. அது தோலில் படிகிறது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற போதிலும், இங்கு இன்னும் சிகிச்சை பெறவில்லை" என்று குறிப்பிட்டார்.

சந்தேகநபர்களை மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்ட நீதவான், பத்மேயை எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றில் நிலுவையிலுள்ள வேறொரு வழக்குக்காக ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர