ரூ. 80 பில்லியன் செலவில் புதிய மின்சார ரயில் திட்டம்: அடுத்த ஆண்டு பணிகள் ஆரம்பம்!
இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், சுமார் 80 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய மின்சார ரயில் சேவைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளன.
தினசரி பயணிகளுக்கு விரைவான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதியை வழங்குவதே இந்த மின்சார ரயில் சேவையின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கான ஆரம்பகட்ட திட்டமிடல் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. இந்த மின்சார ரயில் சேவையானது, கொழும்பு - மருதானை நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக, மருதானையிலிருந்து ராகம, பாணந்துறை மற்றும் மலவத்த உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏனைய பிராந்தியங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பெலியத்தவிலிருந்து 'ருஹுணு குமாரி' ரயிலில் வரும் பயணிகள், பாணந்துறையில் இறங்கி அங்கிருந்து இந்த புதிய மின்சார ரயில் நெட்வொர்க் மூலமாக கொழும்புக்கான தங்களது பயணத்தைத் தொடர முடியும்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத்ன இந்த விவரங்களை வெளியிட்டார்.