குற்றக் குழுக்களால் இலங்கையிலேயே தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் - பொலிஸார் சந்தேகம்
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் தமக்குத் தேவையான துப்பாக்கிகளை நாட்டிற்குள்ளேயே தயாரிக்கத் தொடங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தெமட்டகொட பகுதியில் இன்று (03) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒலிபெருக்கிப் பெட்டி ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 டி-கட்டஸ் ரக துப்பாக்கிகள், 24 டி-56 தோட்டாக்கள் மற்றும் பெருமளவிலான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
45 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் தலைமறைவாக உள்ள மலிஷ என்பவரின் வழிகாட்டலின் கீழ் இந்த ஆயுதங்கள் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.