கடும் குளிர்கால புயலால் அமெரிக்காவில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
வடக்கு கரோலினாவைத் தலைமையிடமாகக் கொண்ட Duke Energy நிறுவனம், தற்காலிக மின்தடை ஏற்படாமல் இருக்க திங்கட்கிழமை காலை உச்ச நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவை தாக்கிய கடும் குளிர்கால புயல் காரணமாக போக்குவரத்து மற்றும் மின்சார அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, 1,200க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது. பல மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயலால் பல மாநிலங்களில் கனமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக நார்த் கரோலினா மாநிலத்தின் கடற்கரை மற்றும் உள்பகுதிகளில் இரட்டை இலக்க அளவில் பனிக்கட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வானிலை நிலையத்தின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு பின்னர் பனிப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
வானிலை அமைப்பு அட்லாண்டிக் கடலில் மேலும் வலுப்பெறக்கூடும் என முன்னறிவிப்பு இருந்தாலும், அதன் கடுமையான தாக்கங்கள் பெரும்பாலும் கடலுக்கு வெளியே மட்டுமே இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஏற்பட்ட குளிர்கால வானிலை, குறிப்பாக கரோலினா பகுதிகளில் அமெரிக்க மின்கம்பி வலையமைப்புகளுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வடக்கு கரோலினாவைத் தலைமையிடமாகக் கொண்ட Duke Energy நிறுவனம், தற்காலிக மின்தடை ஏற்படாமல் இருக்க திங்கட்கிழமை காலை உச்ச நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக ஏற்பட்ட பனிப் புயலால் மின் பரிமாற்றக் கம்பிகள் சேதமடைந்ததால், அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் மின்தடை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோக கண்காணிப்பு தரவுகளின்படி, பல மாநிலங்களில் சுமார் 1,78,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்னும் மின்சாரம் இன்றி உள்ளன.
இதற்கிடையில், விமான சேவைகளிலும் பாதிப்பு தொடர்ந்த நிலையில், சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.