தேவையற்ற விளம்பரத் தொலைபேசி அழைப்புகளுக்கு பிரான்ஸில் அதிரடித் தடை
நாடு முழுவதும் தேவையற்ற வணிக ரீதியிலான விளம்பரத் தொலைபேசி அழைப்புகளுக்கு பிரான்ஸ் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இனிமேல் நிறுவனங்கள் விற்பனை நோக்கத்துக்காக நுகர்வோரைத் தொடர்புகொள்ளும் முன்பு, அவர்களின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள், நேற்று (2026, ஓகஸ்ட் 11) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
முன்னதாக, நுகர்வோர் தங்களுக்கு அழைப்புகள் வேண்டாம் என்று விலகும் முறை இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்கள் ஒரு நுகர்வோரை அழைப்பதற்கு முன்பு அவரிடம் அனுமதி பெற்றிருப்பதை நிரூபிக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடையே ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் தொடர்பான குறிப்பிட்ட அழைப்புகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறும் தனிநபர்களுக்கு €75,000 வரையிலும், நிறுவனங்களுக்கு €375,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.
நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் தொலைபேசி வழி மோசடிகளைக் குறைப்பதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
தேவையற்ற அழைப்புகள் குறித்துத் தொடர்ந்து வரும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, தொலைபேசி சந்தைப்படுத்துதலில் (telemarketing) கடுமையான விதிகளைப் பின்பற்றும் நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் தற்போது இணைந்துள்ளது.