ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பெரும் நிதி மோசடி: போலி மின்னஞ்சலால் 974,000 திர்ஹாம் தவறான கணக்கிற்கு மாற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிற்கு பணம் செலுத்தும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோசடி சம்பவம் தொடர்பிலும், இந்தியாவின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பிலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நேற்று (16) வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் மாற்றத்தை பயன்படுத்தி, போலியான தகவல்களுடன் வங்கி கணக்கு விவரங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த போலி மின்னஞ்சலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு தகவல்களை நம்பி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தமாக 974,000 திர்ஹாம் தொகையை தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இணைய வழி நிதி மோசடியாக கருதப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்பாக, சென்னை அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குறித்தும் நிறுவனம் விரிவாக விளக்கமளித்துள்ளது. அங்கு பணியாற்றிய நிதிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள் குழுவொன்றே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவர்கள் வணிக விலைப்பட்டியல்களில் உள்ள கையொப்பங்கள் மற்றும் பணப்பரிமாற்ற விபரங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றியமைத்து, நீண்டகாலமாக சுமார் 22 மில்லியன் இந்திய ரூபாய் தொகையை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
