எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச
அநீதியான முறையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (11) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பழைய கையிருப்புகளுக்கே விலையை அதிகரித்து நுகர்வோரிடம் அதிக கட்டணம் வசூலிப்பது மக்களுக்கு கடுமையான அநீதி விளைவிப்பதாக அவர் கூறினார்.
ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 70 அமெரிக்க டொலர் அளவில் இருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலையை காரணமாக காட்டி விலை சூத்திரத்தை மாற்றி அதிக விலையை அறவிடுவது ஊழல் நிறைந்த செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலை உயர்வை நியாயப்படுத்த அரசாங்கம் தவறான காரணங்களை முன்வைத்துள்ளதாகவும், எண்ணெய் விலை சில மணிநேரங்களுக்குள் மீண்டும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் தற்போதைய விலை அதிகரிப்பை நியாயப்படுத்த முடியாது எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்கள்மீது கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்துவதோடு, நாட்டில் வறுமையையும் அதிகரிக்கச் செய்கிறது. சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் உட்பட உற்பத்தி மற்றும் வருமானம் ஈட்டும் பல தரப்பினருக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
70 அமெரிக்க டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பீப்பாயின் விலையை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த விலை உயர்வு மக்களின் வாழ்வாதாரத்திற்கே நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரசாங்கம் உடனடியாக இந்த தீர்மானத்தை மீளாய்வு செய்து எரிபொருள் விலையை குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.