ஈஸ்டர் தாக்குதல்: கடமை தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (31) மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, குற்றவியல் அலட்சியம், கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே, அது குறித்த துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் இந்தத் தவறு நூற்றுக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்கும் பலர் காயமடைவதற்கும் காரணமாக அமைந்ததாக அரசுத் தரப்பு வாதிட்டது.
இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மைத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
முன்னதாக 2022ஆம் ஆண்டில் இந்த வழக்கிலிருந்து பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்ட போதிலும், உயர்நீதிமன்றம் அந்தத் தீர்மானத்தை இரத்துச் செய்து மீண்டும் விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே, இன்று இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.