தியாகமும் கருணையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் ஹரிணி
புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு தனது அன்பார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தியாகம், சகோதரத்துவம் மற்றும் கருணை போன்ற உயரிய மனிதப்பண்புகளை எடுத்துரைக்கும் இப்பெருநாள், இஸ்லாமியர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் முக்கியமான மத நிகழ்வாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்றாஹீம் நபி அவர்கள் வெளிப்படுத்திய இறைநம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் உன்னத தியாகத்தை நினைவுகூரும் நாளாக ஹஜ் பெருநாள் திகழ்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மனிதகுல நலனுக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும், தமக்குப் பிரியமானவற்றைக் கூட அர்ப்பணிக்கும் மனப்பாங்கை இந்தப் புனித நாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் கூறியுள்ளார்.
இந்நாளில் அனைவரும் இன, மத மற்றும் சமூக வேறுபாடுகளை மறந்து, சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு உணர்வுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
தியாகம் மற்றும் கருணையை மையமாகக் கொண்ட ஹஜ் பெருநாளின் செய்தி, அமைதியானதும் சுபீட்சமானதுமான இலங்கையை உருவாக்கும் பயணத்திற்கு சிறந்த வழிகாட்டுதலாக அமைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய மனப்பான்மைகளையும் வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து, பரஸ்பர மரியாதை, மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்ப அனைவரும் உறுதிபூண வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஹஜ் பெருநாள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி, வளமை மற்றும் இறையாசீர்வாதங்களை கொண்டு வர வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் பிரார்த்தித்துள்ளார்.

