மின்சார சபை தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு – 24 மணி நேர வேலைநிறுத்தம்
இலங்கை மின்சார சபை உட்பட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து திடீர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணி நேரத்திற்கு மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் தங்கள் சேவைகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் போராட்டம் நடைபெற்ற இன்றைய நாளிலும், மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு எந்த சாதகமான பதிலும்வழங்கவில்லை என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து கலந்துரையாடல் நடத்தப்படும் வரை பணிக்கு திரும்பமாட்டோம் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அதே நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் மின்தடை சரிசெய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்த வேலைநிறுத்த காலத்தில் நிறுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
எனினும் முக்கிய சேவைகளுக்கு மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு தேசிய மருத்துவமனை, கண்டி தேசிய மருத்துவமனை, கராப்பிட்டிய போதனா மருத்துவமனை மற்றும் இராணுவத் தலைமையகம் ஆகிய இடங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சுமார் 25 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும், மின்சார சபை மறுசீரமைப்பை ஏற்றுக்கொண்டாலும் ஊழியர்களுக்கு அநீதி விளைவிக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஒப்புக்கொள்ளமாட்டோம் என்றும் இலங்கை மின்சார சபையின் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித் தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.