திடீரென திரும்பிய ஓட்டோ, காருடன் மோதி விபத்து: 7 வயது சிறுமி, தாய் மற்றும் சாரதி பலி!
தெல்கொட, புதிய கண்டி வீதியில் கார் மற்றும் ஓட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பியகமவில் இருருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த ஓட்டோ திடீரென வலதுபுறமாக திரும்பியபோது, எதிரே வந்த காருடன் மோதி கடும் விபத்துக்குள்ளானது.
நேற்று புதன்கிழமை (19) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஓட்டோவின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு குழந்தைகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி உடுபில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஓட்டோ சாரதி, ஒரு பெண் மற்றும் 7 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தெல்கொடவைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் (ஓட்டோ சாரதி) என்றும், சியம்பலாபேயைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 7 வயதுடைய மகள் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், காரில் பயணித்த ஒரு சிறுமியும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.