மன்னிப்பு கோரினார் மைத்திரிபால - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு
தமது ஆட்சிக் காலத்தில் தமக்கு தெரியாமல் வேறொரு தரப்பினரால் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அதேபோன்று கத்தோலிக்க மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று(31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் தாம் தவறிழைத்ததாக அர்த்தப்படாது எனவும் ஜனாதிபதி என்ற வகையில் தம்மால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைக்கும் பட்சத்தில் அதற்கு ஒரு ஜனாதிபதியாக பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதெனவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
