ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை முழுமையாகக் கைப்பற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்னும் சிறிது காலம் அவகாசம் கிடைத்தால் ஹார்முஸ் ஜலசந்தியை (Hormuz Strait) எளிதாகத் திறந்து, அங்கிருக்கும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி பெரும் லாபம் ஈட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானால் முடக்கப்பட்ட இந்த முக்கிய கடல் வழிப்பாதையைத் திறப்பது உலகிற்கே ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் தொடங்கிய ஆரம்பக்கட்டத்திலேயே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால், உலகளாவிய எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த நீரிணையை அமெரிக்கா விரைவில் மீட்கும் என்று டிரம்ப் உறுதி அளித்து வருகிறார்.
அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்று அவர் முன்னர் கூறியிருந்தாலும், குறுகிய கடல் பகுதியில் ஈரானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வது சவாலானது என்பதால் அமெரிக்க ராணுவம் தற்போது வரை தயக்கம் காட்டி வருகிறது.
ஈரானின் இயற்கை வளங்களை "எடுத்துக் கொள்வோம்" என்ற டிரம்பின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1962-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்தந்த நாடுகளுக்கே சொந்தமானது என்ற விதிமுறை உள்ளது.
நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்ற இந்த சர்வதேச சட்டத்திற்கு முரணாக, ஈராக் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளிலும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், ஈரானின் எண்ணெய் கிணறுகளைக் குறிவைத்து அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
