பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

ஜுலை 14, 2024 - 11:43
ஜுலை 14, 2024 - 12:14
பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  (Donald Trump) மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மேடையில் இருந்து டிரம்ப் அவசரமாக வெளியேற்றப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவ வீடியோ  : https://youtu.be/1ejfAkzjEhk

மேடையை விட்டுச் செல்லும்போது அவரது காதில் ரத்தம் வழிவதைப் படங்களில் காண முடிகிறது.

பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றனர்.

எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபரால் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

கடும் கண்டனங்கள்; பிரசார கூட்டங்கள் இரத்து

இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் ட்ரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி பைடன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, ஜனாதிபதி பைடனின் பாதுகாப்புக் கருதி அனைத்து பிரசாரக் கூட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

காதில் தோட்டா பாய்ந்ததை உணர்ந்தேன்

இதேவேளை, “ஏதோ ஒன்று நடக்கிறது; அது சரியில்லை என்பதை நான் உணர்ந்தேன்.  காதின் தோல் பகுதியைத் துப்பாக்கித் தோட்டா துளைத்து வெளியேறுவதை உணர முடிந்தது” என சம்பவம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!