4, 6 வயது பெண் குழந்தைகளுடன் 8 வருடங்களாக இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் மீட்பு!

“இந்தக் குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பியுள்ளது.  இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்தக் காட்டில் இருக்கும் பாம்புகளும் விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றைத் தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மைத் தீண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஜுலை 16, 2025 - 18:20
4, 6 வயது பெண் குழந்தைகளுடன் 8 வருடங்களாக இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் மீட்பு!

இந்தியா - கர்நாடகா மாநில அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள குகையில் ரஷ்ய பெண் ஒருவர், தனது இரு குழந்தைகளுடன் 8 ஆண்டுகள் வசித்துள்ளார். 

அவரை பத்திரமாக மீட்ட கர்நாடக பொலிஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா மாநிலம் - உத்தர கன்னடா மாவட்டத்தின் கோகர்ணா அருகேயுள்ள‌ ராமதீர்த்தா மலையில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து, கோகர்ணா பொலிஸ் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான பொலிஸ் குழு, இம்மாதம் 9ஆம் திகதி ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, நிலச்சரிவு அபாயம் மிக்க பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தங்கியிருப்பதைக் கண்டனர். 

அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் நினா குடினா (வயது 40) எனவும், அவர் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருப்பதாகவும் கூறினார். 

இதையடுத்து அம்மூவரையும் பொலிஸார் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

விசாரணை மேற்கொண்ட கோகர்ணா பொலிஸாரிடம் நினா குடினா கூறியதாவது, “நான் ரஷ்யாவைச் சேர்ந்தவள். 2016ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணியாக கோவாவுக்கு வந்தேன். அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து, கோகர்ணாவில் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். 

“பின்னர் நேபாளம் சென்று, 2017இல் மீண்டும் கோகர்ணாவுக்கு வந்தேன். இந்தக் குகையை எனக்கு கடந்த‌ 8 ஆண்டுகளாகத் தெரியும். ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால், உள்ளூர் சாமியார் ஒருவர் தியானம் செய்வதற்காக இந்தக் குகையை காட்டினார். 

“இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன். அதன்மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது அவரிடம் இருந்து பிரிந்து வாழும் நிலையில், என்னுடன் மூத்த மகள் பிரேமா (வயது 6), இளைய மகள் அமா (வயது 4) உடன் இருக்கிறார்கள்.

“என் மகள்க‌ளுக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறேன். தினமும் ஆற்றில் குளித்துவிட்டு, மூவரும் தியானம் செய்வோம். 

“10 நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்குத் தேவையான சமையல் பொருட்களை வாங்கி வருவேன். எனக்குத் தேவையான பணத்தை உறவினர்கள் சிலரும், நண்பர்களும் அனுப்புகின்றனர். என்னிடம் கையடக்கத் தொலைபேசி இருந்தாலும், அதனைப் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. 

“இந்தக் குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பியுள்ளது.  இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்தக் காட்டில் இருக்கும் பாம்புகளும் விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றைத் தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மைத் தீண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிஸார், ரஷ்ய பெண்ணையும், அவரது மகள்களையும் கோகர்ணா மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். 

அவர்களின் கடவுச்சீட்டு மற்றும் விசா போன்றவற்றை பரிசோதித்து, மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!