எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் - வெள்ள அபாயம் ஏற்படாது!
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தம் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மற்றும் மழை பெய்யும் தன்மை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நதிகளின் நீர்மட்டம் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி குறைந்ததன் காரணமாக, நில்வளா ஆறு, கிங் ஆறு, களு ஆறு மற்றும் அத்தனகலு ஓயா போன்ற நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், இது ஒரு தற்காலிக நீர்மட்டக் குறைபாக இருக்கலாம் என நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது 18 பிரதான நீர்த்தேக்கங்களும், 18 நடுத்தர நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வரும் போதிலும், இதனால் பெரிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று (14) காலை மூடப்பட்டுள்ளன.
வெள்ள நீரினால் மூழ்கியிருந்த காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பரிமாற்ற நுழைவு வீதிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அளுத்கம - மத்துகம வீதியில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்துள்ள நிலையில், போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
