காணாமல் போன ஆட்டிறைச்சி; பொலிஸார் நால்வருக்கு இடமாற்றம்!
குறித்த சான்றுப் பொருளை பார்வையிட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு நீதவான் சென்ற வேளையில், ஆட்டிறைச்சி, மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சி காணாமல் போன சம்பத்தையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதி வீடொன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (26) முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதி வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை கைது செய்தனர்.
பின்னர் குறித்த சந்தேகநபர், அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போது தனது வீட்டு நிகழ்வு ஒன்றிற்கே ஆட்டை அறுத்திருந்தாக சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குறித்த சான்றுப் பொருளை பார்வையிட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு நீதவான் சென்ற வேளையில், ஆட்டிறைச்சி, மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.
சான்றுப்பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கெனவே கூறிய பொலிஸார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதவானுக்கு ஏற்படுத்தியது.
யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான், பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு பணித்தார். அதன்போது குறித்த ஆட்டின் சதைகள் யாவும் மாயமாக மறைந்திருந்தன. ஆட்டிறைச்சியின் பின்னங்கால்கள் கூட தொலைந்து போயிருந்தன.
இது பற்றி வினவியபோது, தேடுதலுக்குச் சென்ற பொலிஸார், ஆட்டிறைச்சியின் சில பகுதிகளை எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு, அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே, ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு எதிராக அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை மேற்கொண்டு, அப்பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும் ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவூருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பாறுக் ஷிஹான்)