போக்குவரத்து கேமரா ஊடுருவல் மூலம் கமேனியின் இருப்பிடத்தை கண்டறிந்த இஸ்ரேல்? உளவு தகவல்கள் வெளியான பின்னணி!
ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) இருந்த இடத்தை இஸ்ரேல் எவ்வாறு கண்டறிந்தது என்ற கேள்விக்கு தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹ்ரானில் (Tehran) உள்ள அரசாங்க கண்காணிப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக செயல்படும் போக்குவரத்து கேமராக்களை இஸ்ரேல் ஊடுருவியதாக கூறப்படுகிறது. ஆட்சிக்கு எதிரானவர்களை கண்காணிக்க பயன்படுத்தப்படும் இந்த கேமரா அமைப்பை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் (Mossad) பல ஆண்டுகளுக்கு முன்பே ஹேக் செய்திருக்கலாம் என சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கமேனியின் பாதுகாப்புக் குழுவினர் வாகனங்களை எங்கு நிறுத்துகிறார்கள் என்பதை பதிவு செய்த ஒரு குறிப்பிட்ட கேமரா வழியாக, பாதுகாப்பு பணியாளர்களின் முகவரி, பணிநேரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்புகள் போன்ற விவரங்கள் திரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 28 பிப்ரவரி சனிக்கிழமை தெஹ்ரான் நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படும் தெஹ்ரானின் பாஸ்ச்சுர் (Pasteur Street) பகுதியில் அன்றைய தினம் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு அணியினருடன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென தனிப்பிரிவு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், உளவு தகவல் வழங்கிய உள்ளக ஆதாரமும் இருந்திருக்கலாம் என்றாலும், அதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, Central Intelligence Agency (CIA) கமேனியின் நடமாட்டத்தை நெருக்கமாக கண்காணித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த காலை அவர் வீட்டிலேயே இருப்பார் என்ற தகவலை அறிந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சில மூத்த ஈரானியத் தலைவர்களும் அங்கு கூடுவதாக இருந்ததாக உளவுத்தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை அமெரிக்க உளவு அமைப்பு இஸ்ரேலுக்கு பகிர்ந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தாக்குதல் தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்விவரங்கள் அனைத்தும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இத்தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.