சிறுமி ஹிந்த் ரஜப் கொலை: துப்பாக்கிச் சூட்டை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்; குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு
காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது ஆறு உறவினர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், இஸ்ரேல் ராணுவம்தான் அவர்கள் பயணித்த காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது என முதல் முறையாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணையை தொடங்கவுள்ளதாக அது அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலில் ஹிந்த் ஆரம்பத்தில் உயிர் தப்பினார். காயமடைந்த நிலையில் காருக்குள் சிக்கிக் கொண்ட அவர், பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு தொலைபேசியில் அழைத்து, மணிக்கணக்கில் உதவிக்காக கதறி அழுதார்.
அந்த உரையாடலில், தனக்கு நேராகவே டாங்கிகள் வந்து கொண்டிருப்பதை தான் பார்ப்பதாகவும், "இருட்டாகிக் கொண்டிருக்கிறது, நான் பயப்படுகிறேன்" என்றும் அவர் கூறியதாக, அந்த அழைப்பை ஏற்று பேசிய ஆபரேட்டர் ரானா ஃபகீஹ் பிபிசியிடம் தெரிவித்தார்.
இஸ்ரேல் ராணுவத்துடன் ஒருங்கிணைப்பு செய்த பின்னரே, ஹிந்தை மீட்க ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. ஆனால், மீட்பு வாகனம் அந்த பகுதியை நெருங்கியதும், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு மருத்துவப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, ஹிந்த் மற்றும் மீட்பு பணியாளர்களுடனான அனைத்து தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. சில நாட்களுக்குப் பின்னரே ஹிந்தின் உடல் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து முதலில், அந்த பகுதியில் தங்களது வீரர்கள் யாரும் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. ஆனால், அந்த தகவல் விரைவில் கேள்விக்குள்ளானது. பின்னர், ஹிந்த் இருந்த பகுதியில் ராணுவம் "பயங்கரவாத இலக்குகளுக்கு எதிரான சோதனைகளை" மேற்கொண்டதாக அது ஒப்புக்கொண்டது.
தற்போது வெளியான புதிய அறிக்கையில், "பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸின் இயக்கத்தில் ஒருங்கிணைப்பு தவறுகள் இருந்ததால், இந்த சம்பவத்தின் மீது குற்றவியல் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று IDF தெரிவித்துள்ளது.
மேலும், "IDF படையினர் ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன" என்றும், அந்த வாகனம் "IDF செய்தித் தொடர்பாளர் அப்பகுதி மக்களுக்கு முன்னதாக வெளியிட்ட அறிவிப்புக்கு மாறாக பயணித்தது" என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹிந்தின் குரல் பதிவு உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து, இந்த கொலை சர்வதேச கண்டனத்தை பெற்றது. இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. ஐநா இந்த வழக்கை ஒரு விசாரணை ஆணையத்தில் மேற்கோள் காட்டி, இஸ்ரேல் மீது போர்க்குற்றப் புகார்களை முன்வைத்தது.
இந்த அறிவிப்பில், ஹிந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கொலைகள் மட்டுமின்றி, மார்ச் 2025-ம் ஆண்டு நடந்த மற்றொரு சம்பவத்தில் 15 பாலஸ்தீனியர்கள் (மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஐநா ஊழியர் உட்பட) கொல்லப்பட்டது குறித்தும் விசாரிக்கப்படும் என IDF தெரிவித்துள்ளது.
அந்த சம்பவத்தில், ரஃபாவில் அவசர அழைப்பின் போது ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனம் மற்றும் ஐநா வாகனம் மீது IDF துப்பாக்கிச் சூடு நடத்தியது. இறந்த மருத்துவப் பணியாளர்களில் ஒருவரின் செல்போனில் கிடைத்த வீடியோ, அந்த வாகனங்கள் அவசர விளக்குகளை இயக்கியிருந்ததைக் காட்டியதை அடுத்து, தாங்கள் "தவறாக" கூறியதை IDF ஒப்புக்கொண்டது. அந்த சம்பவத்திலும் குற்றவியல் விசாரணை நடத்தப்படும் என்று IDF அறிவித்துள்ளது.
இருப்பினும், பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, இந்த விசாரணையில் தனக்கு "நம்பிக்கை இல்லை" என்றும், இஸ்ரேலின் உள் விசாரணைகள் "அடிப்படையில் குறைபாடுடையவை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நம்பகமான வழிமுறையாக கருத முடியாது" என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான யேஷ் டின் இயக்குநர் ஜிவ் ஸ்டால், "இஸ்ரேலிய படைகளின் குற்றவியல் விசாரணைகள் அரிதாகவே தண்டனைகளுக்கு வழிவகுக்கும்" என்றும், "குற்றங்களின் தீவிரத்துடன் ஒப்பிடும்போது வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் இலகுவானவை" என்றும் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் முயற்சியிலும், தனது படைகளின் தவறுகளை தானே ஆய்வு செய்கிறது என்பதை நிரூபிக்கவுமே இஸ்ரேல் இந்த விசாரணைகளை தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பின்னர் தொடங்கிய காசா போரில், இதுவரை 73,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் ஹமாஸ் நிர்வாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.