ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் சீனா ரகசிய கோரிக்கை
ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் இரகசியமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட தீவிர இராணுவ முன்னேற்றங்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா முன்வைத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்கவே, சீனா இந்த இராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
செங்கடல் கடலோரப் பகுதிகள் மற்றும் பாப் எல்-மண்டேப் நீரிணையை அண்டிய பிரதேசங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தீவிர இராணுவ முன்னேற்றங்களை அடைந்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் பிராந்திய கப்பல் போக்குவரத்து பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் எழுந்தது. இந்த தீவிர நிலையைத் தொடர்ந்தே சவூதி அரேபியா, சீனாவின் தலையீட்டையும் உதவியையும் நாடியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும், கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துமாறும் ஈரானிடம் சீனா வலியுறுத்தியுள்ள போதிலும், இது குறித்த உத்தியோகபூர்வ பகிரங்க அறிக்கைகள் எதனையும் இதுவரை சீனா வெளியிடவில்லை.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசான சீனா முழுமையாக நம்பியிருக்கும் முக்கிய சர்வதேச எரிசக்தி விநியோகப் பாதைகளில் இந்த மோதல் மேலும் விரிவடைவதைத் தடுக்க வேண்டும் எனவும், இதற்காக ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான தனது செல்வாக்கை ஈரான் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளதாக குறித்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.