இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானிய போர்க்கப்பல் மூழ்கியது: வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதாக சந்தேகம்
இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால், ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான IRIS Dena என்ற போர்க்கப்பல் ஒரு வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட பின்னர் கடலில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தெற்குப் பகுதியிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில், இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
சுமார் 180 மாலுமிகளைக் கொண்டிருந்த இந்தக் கப்பல், இன்று (04) அதிகாலை ஆபத்துக் கால சமிக்ஞையை (distress call) விடுத்த பின்னர் கடலில் மூழ்கியது.
இந்தச் சம்பவத்தில் போர் கப்பலில் பயணித்த இராணுவ வீரர்கள் உள்பட 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 32 மாலுமிகள் காலி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பிராந்திய இராணுவ பதற்றங்களின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று இலங்கையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தத் தாக்குதல் ஒரு வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்டதாகத் தூதரக மற்றும் கடல்சார் வட்டாரங்களில் தகவல்கள் உலா வந்தாலும், இலங்கை அதிகாரிகள் இதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
தற்போது இலங்கை கடற்படையின் இரண்டு கப்பல்களும் ஒரு விமானமும் சர்வதேச கடல்சார் கடமைகளின் அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்தச் சம்பவத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.