ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: எரிபொருள் விநியோகம் சீராகுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு  ஈரான் அனுமதி: எரிபொருள் விநியோகம் சீராகுமா?

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் விமான நிலையங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

உலகளவில் எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான கடல் பாதையாக விளங்கும் இந்த ஜலசந்தியில் ஏற்பட்ட அச்சுறுத்தலால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சியுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி வழங்க ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது.

எரிபொருள் ஏற்றி வரும் கப்பல்களை இந்த கடல் பாதை வழியாக இந்தியாவுக்கு அனுப்பலாம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் சுமார் 45 சதவீதம் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் இந்த கடல் பாதையை பயன்படுத்துகின்றன.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர