செம்மணியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மீட்பு; பாரிய புதைகுழியா என சந்தேகம்?
யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் நாள் அகழ்வுப்பணிகளின் போது, மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையால் செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.
அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பணிகள் வியாழக்கிழமை (15) ஆரம்பமான நிலையில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் சனிக்கிழமை (17) முன்னெடுக்கப்பட இருந்தன.
எனினும், இன்றைய தினம் அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.