பெண் உதவியாளர்கள் மூவருக்கு தலா ரூ.45 லட்சம் பரிசு வழங்கிய டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் சர்ச்சை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தலா ரூ.45 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கிய விவரம் வெள்ளை மாளிகையின் ரகசிய சொத்து அறிக்கையிலிருந்து கசிந்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளர் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குநர் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகியோரே இந்தப் பணத்தைப் பெற்றுள்ளனர்.
அரசுப் பதிவுகளின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு தலா ரூ.1.35 கோடி வரை சம்பளம் பெற்று வருகின்றனர். இவர்களில் நட்டாலி ஹார்ப், டிரம்பின் சமூக ஊடகப் பதிவுகளை நிர்வகிப்பது மற்றும் செய்திகளை அச்சிட்டு வழங்கும் முக்கிய பணிகளை மேற்கொண்டு வருபவர் ஆவார். அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் டிரம்பை விமர்சித்தபோதும் நட்டாலியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசுப் பதவிகளில் இருப்பவர்களுக்கு இத்தகைய பெருந்தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டதா என்றும், இது மக்கள் வரிப்பணமா அல்லது டிரம்பின் சொந்த நிதியா என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதற்குப் பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை, இந்தத் தொகையானது அதிகாரப்பூர்வப் பணிகளுக்கு அப்பாற்பட்டு டிரம்பின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளது
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.