நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, நேபாளத்தில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 64 பேரின் உடல்கள் சித்வான் (Chitwan) மாவட்டத்தின் கீழ்நிலைப்பகுதிகளிலும், 26 பேரின் உடல்கள் கிழக்கு நவல்பராசியிலும் (Nawalparasi East) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திபெத் பகுதியில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள இராணுவம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 2,000 இராணுவ வீரர்களைக் களமிறக்கியுள்ளது. மோசமாக பாதிக்கப்பட்ட ரசுவா (Rasuwa) மற்றும் நுவாகோட் (Nuwakot) மாவட்டங்களில் இவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை வெள்ளத்தில் சிக்கியிருந்த 97 பேரை இராணுவம் மீட்டுள்ளது. இதில் திரிசூலி ஏ (Trishuli A) நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 3 தொழிலாளர்களும் அடங்குவர்.
பாதிக்கப்பட்ட பகுதி யாத்ரீகர்கள் மற்றும் மலையேறுபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்பதால், பெருமளவிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர்.
நேபாளத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேர், உக்ரைனைச் சேர்ந்த 53 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேர் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேர் அடங்குவர்.
மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 28 பொலிஸ் அதிகாரிகள் உட்பட நேபாளத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் காணாமல் போயுள்ளனர்.
திபெத்தின் கைரோங் (Gyirong) மாவட்டப் பகுதியில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558ஆக உயர்ந்துள்ளது. இதில் 260 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.
வழிகாட்டிகள் உட்பட கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்ற 47 பேர் தற்போதைய நிலவரப்படி தொடர்புகொள்ள முடியாத நிலையில் காணாமல் போயுள்ளனர்.
தொடக்கத்தில் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வெள்ளம் வந்ததாக அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்றும், பனிப்பாறை சரிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட அதிர்வுகளே நிலநடுக்கம் போன்ற ஆற்றலை உருவாக்கியுள்ளன என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இமயமலைப் பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வந்தாலும், இந்த குறிப்பிட்ட பேரழிவில் அதன் பங்கு என்ன என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றுப் படுகைகளில் அடித்து வரப்பட்டுள்ள பெரும் இடிபாடுகள் மற்றும் சேறுகள் காரணமாக, திரிசூலி ஆற்றில் தற்காலிக அடைப்பு ஏற்பட்டு நிலச்சரிவு அணை (landslide dam) உருவாகலாம் என்றும், இதனால் மீண்டும் ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் நேபாளத்துக்கு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
அமெரிக்கா அவசரக்கால தங்குமிடம், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற தேவைகளுக்காக $500,000 நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
நேபாள பிரதமரின் அலுவலகம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்டமாக போர்வைகள், கொசுவலைகள், சோலார் விளக்குகள் உள்ளிட்ட 8 டன் அளவிலான அவசர நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


