சில நிமிடங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்: 900 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்!
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கிலிருந்து சுமார் 900 மாணவர்களை ஒரு தலைமை ஆசிரியர் தனது துரிதமான மற்றும் சாதுரியமான முடிவால் காப்பாற்றியுள்ளார்.
நுவாகோட் (Nuwakot) பகுதியில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் (Tribhuvan Trishuli Secondary School) தலைமை ஆசிரியரான ராஜேந்திர தாவாடி (Rajendra Dawadi), வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த தொடர் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றவுடன், இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
அந்தப் பள்ளியில் மொத்தம் 1,600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மேல்நிலைப் பகுதியான பெட்ராவதி (Betrawati) குடியிருப்பைக் கடந்து வெள்ளநீர் ஏற்கெனவே சீறிப்பாய்ந்து வருவதாக, சில நிமிட இடைவெளியில் 04 வெவ்வேறு நபர்களிடமிருந்து அவருக்கு எச்சரிக்கை அழைப்புகள் வந்தன.
இந்த எச்சரிக்கையை அடுத்து, அவர் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர்களை வெளியேற்ற முடிவு செய்தார்.
"வெள்ளம் வராமல் போனாலும் பரவாயில்லை, அது ஒரு நாள் வகுப்பு இழப்பு மட்டுமே" என்று நினைத்து அவர் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்ததாக பிபிசி செய்தி நிறுவனத்திம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பாதுகாப்பான உயரமான பகுதிக்கு வெளியேற்றப்பட்டபோது, ஆற்றிலிருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் இருந்த பள்ளி விடுதி கட்டிடம் வெள்ளத்தில் மூழ்குவதை தாவாடி கண்டார்.
"நாங்கள் இன்னும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால், இன்று உங்களிடம் பேச நாங்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டோம்" என்று அவர் அதிர்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

நேபாள பொலிஸாரின் தகவல்படி, இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 788 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை, காப்பாற்றப்பட்ட 900 மாணவர்களில் ஒருவரான 16 வயது மாணவி யுனிஷா (Yunisha), தான் வெறும் 10 விநாடிகளில் உயிர் தப்பியதாகக் குறிப்பிடுகிறார்.
பள்ளியின் பின்புறம் உள்ள குறுகிய, சேறும் சகதியுமான பாதையில் தனது நண்பர்களுடன் மேல் நோக்கி ஓடியதாகவும், கண்ணிமைக்கும் நேரத்தில் கண்முன்னே இருந்த கடைவீதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.
வெள்ளச் செய்தி கேட்டதும் யுனிஷாவின் தாயார் சபினா ஸ்ரேஸ்தா (Sabina Shrestha) தனது மகளையும் கணவரையும் தொடர்புகொள்ள பல மணி நேரம் முயன்று தவித்துள்ளார். தொலைபேசி இணைப்புகள் கிடைக்காததால் அவர் கடும் பீதியடைந்தார்.
இறுதியாக மகளுடன் பேச முடிந்தபோது நிம்மதியடைந்த போதிலும், மூன்று நாட்களுக்குப் பிறகு யுனிஷா வீடு திரும்பும் வரை குடும்பத்தினர் மிகுந்த கவலையிலேயே இருந்தனர். "கடவுள் என் மகளைக் காப்பாற்றிவிட்டார்" என்று அவர் நிம்மதியுடன் தெரிவித்துள்ளார்.
