20 வயது யுவதியைத் திருமணம் செய்துகொண்ட 72 வயது மலேசிய கால்பந்து நட்சத்திர வீரர் அப்தா அலிப்
மலேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டத்தோ அப்தா அலிப் தனது 72 ஆவது வயதில் 20 வயதுடைய யுவதி ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தொழில்முறை உதைபந்தாட்டத்திலிருந்து விலகியிருந்த அவர், தற்போது தமது தனிப்பட்ட வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஓகஸ்ட் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் திருமணம் தொடர்பான செய்தியை, முன்னாள் தேசிய அணி வீரரும் பயிற்றுவிப்பாளருமான அவரது தம்பி டத்தோ யூனுஸ் அலிப் உறுதிப்படுத்தியுள்ளார். அப்தா அலிப் தனது இளம் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி மலேசிய உதைபந்தாட்ட இரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

இரு குடும்பத்தினரதும் முழுமையான சம்மதம் மற்றும் ஆசீர்வாதத்துடனேயே இந்தத் திருமணம் இனிதே நடைபெற்றதாக யூனுஸ் அலிப் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பின்னர் புதுமணத் தம்பதிகள் தமது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்து வருவதாகவும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இணைந்து வாழப் பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் மலேசிய உதைபந்தாட்டத்தின் பொற்காலத்தில் டத்தோ அப்தா அலிப் மிக முக்கியமானதொரு வீரராகத் திகழ்ந்தார்.
குறிப்பாக, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்ற மலேசிய அணியில் இவர் பிரதான பங்கு வகித்தார். எனினும், ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மலேசியா அந்த ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்ததால் இவரால் அதில் களமிறங்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.