கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை!
சீருடையில் இருக்கும் எந்த ஒரு பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

சீருடையில் இருக்கும் எந்த ஒரு பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இதனை நேற்று (01) தெரிவித்தார்.
திருகோணமலையின் நிலாவெளி பகுதியில் மார்ச் 31 ஆம் திகதி, போக்குவரத்து சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து பின்னர் அவர்களைத் தாக்குவதாக காணொளி வெளியானமை குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தாலும், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.