கேப்டன் விஜயகாந்த் இறுதி பயணம்... அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
கேப்டன் விஜயகாந்த் இறுதி பயணம்: அதன் பிறகு விஜயகாந்த் உடலானது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது உடல் முதலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தார்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு விஜயகாந்த் உடலானது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அங்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் , தொண்டர்கள் என ஆயிரக்கானோர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த இன்று அதிகாலை அவரது உடல் சென்னை தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது.
சந்தன பேழையில் துயில் கொண்டார் கேப்டன்... மனதை கனக்க செய்த வாசகம்!
இன்று அதிகாலை முதல் சென்னை தீவுத்திடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு பிற்பகல் 2.40 மணியளவில் சென்னை தீவு திடலில் இருந்து விஜயகாந்தின் இறுதி பயணம் அவரது கட்சி தலைமை அலுவலகமான கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கட்டடம் நோக்கி புறப்பட்டது.
வழிநெடுக மக்கள் வெள்ளத்தில் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கண்ணீர் மல்க பொதுமக்கள் கேப்டனை வழியனுப்பினர்.
இறுதியாக கேப்டன் விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர், அரசு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், குடும்பத்தார்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி , இறுதி சடங்குகளை செய்தனர். அதன் பிறகு “புரட்சி கலைஞர்” கேப்டன் விஜயகாந்த் என எழுதப்பட்ட சந்தன பேழையில் வைக்கப்பட்ட கேப்டனின் உடல் தேமுதிக தலைமை கட்டட அலுவலகத்தில் புதைக்கபட்டப்பட்டது.