அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முழு கடையடைப்பு போராட்டம்

பூரண ஹர்த்தால் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஒக்டோபர் 18, 2023 - 16:09
ஒக்டோபர் 18, 2023 - 16:09
அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முழு கடையடைப்பு போராட்டம்

எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணம் தழுவிய நிலையில் பூரண ஹர்த்தால் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதை சுட்டிக்காட்டியும் - கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் இக்கருத்தினை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறையிலும் கூட தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதி இல்லை என்று சொன்ன நிலவரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சட்டத்தரணிகள் வடக்கு, கிழக்கு கொழும்பு என்று இதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களும் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இதற்கான போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. பல வடக்கு, கிழக்கு மாகாண மக்களது கோரிக்கைகளுக்கு இணங்க நாங்கள் வருகிற 20-ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய நிலையில் நாங்கள் ஒரு முழு கடையடைப்பு ஹர்த்தால் போராட்டத்தை நடத்துவதற்கு  தீர்மானித்திருக்கின்றோம்.

இது தொடர்பாக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய கட்சிகள் பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து கூட பேசி இந்த விஷயங்களை முன்னெடுப்பார்கள்.

ஆகவே இந்த மக்களிடம் நாங்கள் ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைக்கின்றோம். என்னவென்றால் இலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற அந்த நீதியை உருவாக்கவும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிற நீதியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்காமல் சர்வதேச தமிழ் மக்களுக்கான ஒரு பாதுகாப்பை உருவாக்க வேண்டிய தேவை ஒன்று வந்திருக்கின்றது.

 அந்தப் பாதுகாப்பை உருவாக்குவதற்கான நடைமுறைகளையும் சர்வதேசம் யோசிக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு வந்திருக்கிறார்கள் ஆகவே அந்த வகையில் நாங்கள் சகல தமிழ் அமைப்புகளும் பொது அமைப்புகள் தமிழ் கட்சிகள் இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம் எங்களுக்கு தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தில் எல்லோரும் முன்வரவேண்டும் என்றார்

குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் க.விவிக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கலந்து கொண்டுள்ளனர்.

பு.கஜிந்தன்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!