மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

சுறா மீன் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாயாகவும் வளையா மீன் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாயாகவும் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து மீனவர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

மே 30, 2024 - 15:19
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை. இருந்த போதிலும், கரை வலை மீன் வள்ளங்கள் மீன்பிடி நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, கல்முனை, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில் மற்றும் பொத்துவில் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் புயல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், மீன்கள் இன்மையால் மீன் சந்தைகளும் மூடிக் காணப்படுகின்றன.

இதனால் ஒரு கிலோகிராம் விளைமீன் 1,600 ரூபாயாகவும் பாரை மீன் ஒரு கிலோகிராம் 2,400 ரூபாயாகவும் சூடை மீன் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாயாகவும் சுறா மீன் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாயாகவும் வளையா மீன் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாயாகவும் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து மீனவர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இவை தவிர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

மேலும், இறால் ஒரு கிலோகிராம் 1,800 ரூபாயாகவும் கணவாய் ஒரு கிலோகிராம் 1,700 ஆகவும்  நண்டு ஒரு கிலோகிராம் 1,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. 

கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் ஏனைய நிந்தவூர் மற்றும் மாளிகைக்காடு மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுகின்றன.

கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!