அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்!
சிரியாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து நேற்று திங்கட்கிழமை (24) அமெரிக்கா நீக்கியுள்ளது.
கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளுடன் கூடிய பல தசாப்த காலத்துப் பெயர்சூட்டலை இந்த நடவடிக்கை இரத்துச் செய்வதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இது மற்றொரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், முன்னதாக ‘அல்-நுஸ்ரா முன்னணி’ (al-Nusra Front) என்றும் தற்போது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ (Hay’at Tahrir al-Sham – HTS) என்றும் அறியப்படும் அமைப்பை உலகளாவிய பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
இதற்கு இணங்க, அமெரிக்க நிதித்துறை அமைச்சகமும் பொருளாதாரத் தடைகளிலிருந்து நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு டிசெம்பர் இல், HTS தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் சிரியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்துவந்த பஷர் அல்-அசாத்தை (Bashar al-Assad) ஆட்சியில் இருந்து அகற்றினர்.
13 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இக்குழுவின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
“இன்றைய நடவடிக்கை சிரியாவில் கூடுதல் முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்” என்று நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
இந்த பொருளாதாரத் தடை நிவாரண நடவடிக்கைகள், அமெரிக்க ஜனாதிகதி டொனால்ட் டிரம்ப், சிரியாவிற்கு அளித்த வாக்குறுதிக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளன என்று நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இருப்பினும், உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், சிரியாவில் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் தங்களது உறுதிப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க நிதித்துறை வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக அல்-கொய்தாவின் கிளையாக இருந்த அல்-நுஸ்ரா முன்னணி (HTS), 2016 இல் அந்த பயங்கரவாத அமைப்பிலிருந்து விலகி தனது தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டது.
சிரியாவை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கும் தனது நோக்கத்தை அமெரிக்கா கடந்த ஜூலை மாதமே அறிவித்திருந்தது. இது சிரியா அதிபர் ஷாராவின் மீதான அமெரிக்காவின் நம்பிக்கையாகப் பார்க்கப்பட்டது.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் இடையே, டிரம்ப், சிரிய அதிபர் ஷாராவைச் சந்தித்துப் பேசினார். அரை நூற்றாண்டு காலமாக சிரியாவை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அசாத் குடும்பத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஷாரா தன்னை ஒரு ஒருங்கிணைக்கும் தலைவராகக் காட்ட முயன்று வருகிறார்.
இந்த நடவடிக்கை சிரிய மக்களுக்கு "வளத்திற்கான ஒரு பாதையை" வழங்கியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார்.
மேலும், இது சிரியாவில் தனியார் துறை முதலீடுகளுக்கான இறுதிப் பெரிய தடைகளை நீக்கி, சிரியாவின் பொருளாதார மீட்சி மற்றும் உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார். சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள உயர் அதிகாரிகள் இந்த முடிவை நாட்டின் மிகப்பெரிய வாய்ப்பாக வரவேற்றுள்ளனர்.
தசாப்தத்துக்கும் மேலான போரால் சிரியா இன்னும் பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்தித்து வருகிறது. இந்தப் போரில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.