மேற்காசிய பதற்றம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முக்கிய இடம் – ஐ.நா அறிக்கை
மேற்காசிய நாடுகளில் நீடித்து வரும் பதற்ற நிலைமைகளால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முக்கிய இடம் பெறுகிறது என ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.
“ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் மனித மேம்பாட்டு தாக்கங்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்களில் 80.2 சதவீதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர் என்பதால், அந்தப் பிராந்திய பதற்றம் நேரடியாக இலங்கையைப் பாதிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாத்துறையும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 9,976 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், 2026 மார்ச் 1 முதல் 8 வரை அந்த எண்ணிக்கை 5,956ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 40 சதவீத குறைப்பாகும்.
அதேவேளை, வங்கதேசம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளைப் போலவே, வளைகுடா நாடுகளுடனான ஏற்றுமதி தொடர்புகள் பலவீனமடைதலும் இலங்கையின் பொருளாதார நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
