அதிக வெப்பத்தால் மனநலப் பாதிப்புகளும் அதிகரிக்கும்: மனநல நிபுணர் எச்சரிக்கை!
எல் நினோ (El Niño) தாக்கத்தால் நிலவும் தற்போதைய கடுமையான வெப்பமான காலநிலை, மனநலப் பாதிப்புகள் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாக காலி தேசிய வைத்தியசாலையின் மனநல நிபுணர் வைத்தியர் ரூமி ரூபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் தங்கியிருப்பது உடல் வெப்பத்தை அதிகரித்து, மனநல ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று அவர் விளக்கியுள்ளார்.
அறிவியல் ஆய்வுகளின்படி, இத்தகைய சூழல் கோபத்தை அதிகரிப்பதுடன், சகிப்புத்தன்மையைக் குறைத்து, மோதல் போக்கை வளர்க்கிறது. இந்த நிலைமைகள் இறுதியில் தீவிரமான உளவியல் சிக்கல்களாக உருவெடுக்கக்கூடும்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். மேலும், வாகன ஓட்டிகளிடையே வீதியில் ஆத்திரமும், வீடுகளில் குடும்ப வன்முறைகளும் அதிகரிப்பதற்கு இந்த வெப்பம் ஒரு காரணமாக அமையலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே மனநல பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலையை இந்த வெப்பமான காலநிலை மேலும் மோசமாக்கக்கூடும்.
இதற்கான தற்காப்பு நடவடிக்கைகளாக, நேரடியாக சூரிய ஒளியில் படுவதைத் தவிர்க்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.