'மதிப்பெண்கள் மட்டும் முக்கியம் இல்லை'! இலங்கையின் கல்வி முறையில் அதிரடி மாற்றம் - பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் கல்வி மற்றும் மதிப்பீட்டு முறையானது, நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் பரீட்சைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து விலகி, மாணவர்களின் திறன்கள், படைப்பாற்றல், அனுபவ ரீதியான கற்றல் மற்றும் அவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு கட்டமைப்பாக பரிணமிக்க வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற "250 ஆண்டுகால கல்விச் சிறப்பு: ஓர் இலங்கை அமெரிக்கரிடமிருந்து பாடங்கள்" (250 Years of Educational Excellence: Lessons from a Sri Lankan American) என்ற தலைப்பிலான பொதுச் சொற்பொழிவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அமெரிக்க-இலங்கை புல்பிரைட் (Fulbright) ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்வித்துறை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், அரசாங்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், மாணவர்களின் சாதனைகளை முதன்மையாக பரீட்சைகள் மூலம் மட்டுமே அளவிடும் முறையைத் தாண்டிச் செல்வதாகும் என்று கூறினார்.
நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களைச் சிறந்த முறையில் தயார்படுத்துவதற்காக, செயற்பாடு சார்ந்த மற்றும் அனுபவ ரீதியான கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்துவதில் இந்தச் சீர்திருத்தங்கள் கவனம் செலுத்துகின்றன என்று அவர் மேலும் விளக்கினார்.
தற்போதைய கல்வி முறையில் உள்ள வெற்றிகரமான மற்றும் சாதகமான அம்சங்களை அரசாங்கம் கைவிடப் போவதில்லை என்பதையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார். மாறாக, தற்போதுள்ள அமைப்பின் பலத்தைப் பாதுகாத்து, அதனைத் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீனமயமாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் குறிக்கோள் என அவர் தெளிவுபடுத்தினார்.